சென்னை,
நடிகர் சூர்யாவுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
அண்மையில் தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சம்பவத்தில் போலீஸ்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட குறவர் சமூகத்தைச் சேர்ந்த ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி மற்றும் குடும்பத்தினருக்கு நீதியும், நிவாரணமும் கிடைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி களப் போராட்டங்களையும், சட்டப்போராட்டத்தையும் நீண்டகாலம் தொடர்ச்சியாக நடத்தியது.
ராஜாகண்ணுவை கொலை செய்த குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையையும், கொல்லப்பட்ட அவரது மனைவி பார்வதிக்கு நிவாரணத்தையும் அரசிடம் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியால் பெற்றுத்தரவும் முடிந்தது. இதை கருப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ஜெய்பீம் படத்தின் வெற்றியை எங்களது இயக்கம் நடத்திய போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகவே கருதி பெருமை அடைகிறோம்.
சிறப்பானதொரு திரையாக்கத்தின் மூலம் பார்வதி போன்ற மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் அவலங்களையும், போராட்டங்களையும் வெளிப்படுத்தி சமூகத்தின் கவனத்தை ஈர்த்த தாங்கள், பொருளாதார ரீதியாக மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள பார்வதிக்கும், அவர்களைப் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஏதேனும் ஒரு வகையில் உதவிக்கரம் நீட்டி ஆதரவளிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.