தமிழக செய்திகள்

மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி

உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கியதில் கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே நன்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் முனியன் மகன் பிரகாஷ் (வயது 35). கொத்தனார். இவர் மேட்டாத்தூர் கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலில் மண்டபம் கட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள கிரில் கேட்டை எடுத்து வேறு இடத்தில் வைக்க முயன்றார். இதில் எதிர்பாராத விதமாக அங்கு தரையில் கிடந்த மின் ஒயர் கிரில் கேட் மீது பட்டது. அப்போது மின்சாரம் தாக்கியதில் பிரகாஷ் தூக்கிவீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பிரகாஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கோவில் மண்டபம் கட்டும் பணியின் போது மின்சாரம் தாக்கி கொத்தனார் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT