சென்னை,
தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் பஸ், ரெயில்கள் அனைத்தும் நிரம்பி செல்கின்றன. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து ரெயில்களும், சிறப்பு ரெயில்களும் நிரம்பி விட்டதால் மக்கள் அரசு பஸ்களை நாடி செல்கிறார்கள்.
இதற்கிடையே, வருகிற மே 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மே தின விடுமுறையாகும். அதன் பின்னர் சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. இதனால் வெளியூரில் தங்கியிருந்து பணிபுரியும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிடுவார்கள் என்பதால் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
அதன்படி, சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 30-ந்தேதி மாலையில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு விரைவு பஸ்கள் மற்றும் இதர போக்குவரத்து கழக பஸ்களுக்கு முன்பதிவு செய்து நெரிசல் இல்லாமல் பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.