தமிழக செய்திகள்

நீட் ஒழிப்புக்கான டெல்லி போராட்டம் வெல்லட்டும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழு ஆதரவு

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொடக்க காலம் முதலான உறுதியான கொள்கையாகும்.

சென்னை,

தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், நீட் உள்ளிட்ட தேசிய நுழைவுத் தேர்வு முறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கும், அதற்கு ஆதரவாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனது முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது.

அநீதியான தேர்வு முறை

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொடக்கக் காலம் முதலான உறுதியான கொள்கையாகும். நீட் என்பது சமூகநீதிக்கு எதிரானதும், ஏழை, எளிய, கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவைப் பறிக்கும் அநீதியான தேர்வு முறையுமாகும்.

தேர்வு முறைகேடுகளும், வினாத்தாள் கசிவுகளும் நீட் தேர்வின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், ஒன்றிய அரசு நீட்டை முழுமையாக ரத்து செய்து, மாநிலங்களின் கல்வி உரிமையை மதிக்கும் வகையில் மாணவர் சேர்க்கை முறையை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.