மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 1½ வயது குழந்தை உயிரிழந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் கோபாலசமுத்திரத்தை சேர்ந்தவர் பாலாஜி. இவருடைய மனைவி அரசி. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்களும், 1½ வயதில் மகிழ்வேந்தன் என்ற மகனும் இருந்தனர். மகள்கள் இருவரும் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
நேற்று காலை அரசி தனது மகள்களை பள்ளி வேனில் ஏற்றுவதற்காக, தன் மகனையும் தூக்கிக்கொண்டு சென்றார். மகள்களை வேனில் ஏற்றியபோது, குழந்தை மகிழ்வேந்தனை அவர் கீழே இறக்கிவிட்டுள்ளார். டிரைவர் வேனை இயக்கியபோது எதிர்பாராதவிதமாக வேனின் பின்சக்கரத்தில் சிக்கி குழந்தை மகிழ்வேந்தன் படுகாயமடைந்தான்.
அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.