தமிழக செய்திகள்

திருச்செந்தூர், திருவண்ணாமலை உள்பட பக்தர்கள் அதிகளவில் வரும் 7 கோவில்களில் மருத்துவ மையங்கள்

திருச்செந்தூர், திருவண்ணாமலை, மேல்மலையனூர் உள்ளிட்ட பக்தர்கள் அதிகளவில் வரும் 7 கோவில்களில் மருத்துவ மையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் அதிகளவில் பக்தர்கள் வருகை புரியும் 10 கோவில்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனுக்குடன் உயிர் காக்கும் மருத்துவ முதலுதவி அளித்திடும் வகையில் 2 மருத்துவர்கள், 2 செவிலியர்கள், 2 பல்நோக்கு மருத்துவ பணியாளர்களை கொண்டு மருத்துவ மையங்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 2021-22-ம் ஆண்டு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறையின் மானிய கோரிக்கையில், பக்தர்கள் அதிகளவில் வருகை புரியும் 10 கோவில்களில் தேவையான மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர்களுடன் கூடிய மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

7 கோவில்களில்....

அதன்படி, கோவில் மருத்துவ மையங்களில் பணியாற்ற தகுதியான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு கோவில்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முதல்கட்டமாக, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவில், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில், சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில்,

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்கள் மற்றும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ மையம் ஆகியவற்றை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

பேருதவி

இந்த மருத்துவ மையங்களில் முதலுதவி மற்றும் அடிப்படை சிகிச்சை மேற்கொள்வதற்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரத்த அழுத்த மானி, படுக்கைகள், உயிர்காக்கும் மருந்துகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. இதனால் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நேரத்தில் பேருதவியாக செயல்படும்.

இப்பணிக்காக ஒரு மருத்துவ மையத்திற்கு ஓராண்டிற்கு ரூ.30 லட்சம் வீதம் 10 கோவில் மருத்துவ மையங்களுக்கு மொத்தம் ரூ.3 கோடி கோவில் நிதியிலிருந்து செலவு செய்யப்படும்.

பங்கேற்றோர்

இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் பி.சந்திர மோகன், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் மற்றும்

காணொலி காட்சி வாயிலாக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் டாக்டர் கி.செந்தில்ராஜ், திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ், விழுப்புரம் கலெக்டர் டி.மோகன், ராணிப்பேட்டை கலெக்டர் தெ.பாஸ்கரபாண்டியன், கோவை கலெக்டர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், திருவள்ளூர் கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், திண்டுக்கல் கலெக்டர் ச.விசாகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்