சென்னை,
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடைவிதிக்கக்கோரி நாடு முழுவதும் வரும் 20-ம் தேதி மருந்தகங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. சுமார் 12.4 லட்சம் மருந்தகங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதால் மருந்து விநியோகம் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக அகில இந்திய மருந்தக உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- முறைப்படுத்தப்படாத ஆன்லைன் மருந்து விற்பனையால் நோயாளிகளின் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. முறையான சரிபார்ப்பு இன்றி மருந்துகள் விநியோகிக்கப்படுவதால், ஒரே மருந்துச் சீட்டைப் பலமுறை பயன்படுத்தும் அவல நிலை காணப்படுகிறது.
ஆன்டிபயாடிக், போதை தரக்கூடிய மருந்துகள் தடையின்றி கிடைப்பதற்கு வழிவகுக்கிறது. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலி மருந்துச் சீட்டுகளைப் பயன்படுத்தி மருந்துகள் விற்பனை செய்யப்படுவதால், மருந்து எதிர்ப்புத்திறன் (ஏஎம்ஆர்) அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மேலும், கொரோனா காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட தற்காலிகத் தளர்வுகளைப் பயன்படுத்தி, ஆன்லைன் நிறுவனங்கள் மருந்து விதிகளை மீறி வருகின்றன.
எனவே, மின் மருந்தகச் செயல்பாடுகள் தொடர்பான அரசாணைகளை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மருந்தகங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்தத் தொழிலை நம்பியுள்ள சுமார் 5 கோடி மக்களின் வாழ்வாதாரமும் இதனால் பாதிக்கப்படும். மே 20-ம் தேதிக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், போராட்டம் தீவிரப்படுத்தப்படும். மே 20 அன்று வேலைநிறுத்தம் நடைபெற்றாலும், அவசர கால மருந்துகள் தடையின்றி கிடைக்கப் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.