சென்னை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை (வியாழக்கிழமை) நடைபெற இருப்பதையொட்டி, சென்னை தாம்பரத்தில் இருந்து மதுரைக்கு இன்று (புதன்கிழமை) மாலை முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தாம்பரத்தில் இருந்து செப்டம்பர் 16-ந் தேதி (இன்று) மாலை 5 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரெயில் நள்ளிரவு 2.20 மணிக்கு மதுரையை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், மதுரையில் இருந்து நாளை (17-ந் தேதி) மதியம் 2 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு மெமு ரெயில் இரவு 9.45 மணிக்கு தாம்பரத்தை வந்தடைகிறது.
12 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு மெமு ரெயில், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.