தமிழக செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவில் நில முறைகேடு வழக்கு: முக்கிய குற்றவாளி கைது

நில மோசடிக்கு மூளையாக செயல்பட்ட தாகக் கூறப்படும் இளையராஜா என்பவரை, தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

மதுரை,

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ரூ.100 கோடி நிலம் போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கை விசாரித்து வரும் நிலையில் அதில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நில முறைகேடு

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மதுரை மீனாட்சி அம்மன் கோலிலுக்கு சொந்தமான சுமார் ரூ.60 கோடி கோடி மதிப்பிலான 179 ஏக்கர் நிலம் முறைகேடாக பட்டா மாற்றம் செய்யப்பட்டு, பத்திரப்பதிவு மூலம் ஆக்கிரமித்துள்ளது அரங்கேறியுள்ளது. அறநிலையத்துறையையை அதிரவைக்கும் அளவுக்கு நடந்துள்ள இந்த மோசடி தொடர்பாக விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.

இந்த வழக்கில், முனனாள் தாசில்தார் அன்பழகள், முன்னாள் கிராமி நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) அரசன், சார்பதிவாளர்கள் பிரகாஷ். அனந்தராமன், தங்கள் பெயருக்கு பட்டா மாற்றம் செய்த ராமாயி ஆயியார், செந்தமிழ்ச் செல்வி உள்ளிட்ட 19 பேர் மீது, கோவில் இணை ஆணையர் செல்லத்துரை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

முக்கிய நபர் கைது

விசாரணையில், போலிஆவணங்கள் தாக்கல் செய்து பட்டா பெற்றதாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 40) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், நில மோசடிக்கு மூளையாக செயல்பட்ட தாகக் கூறப்படும் இளையராஜா (52) என்பவரை, தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் அவர் பெங்களுருவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று இளையராஜாவை கைது செய்தனர். பின்னர் அவரை மதுரைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையும் தீவிரமாக நடைபெற்று வருவதாக மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.