நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கொல்லிமலை வல்வில் ஓரி விழா அரங்கத்தில் வருகிற 11-ந் தேதி காலை 10 மணி முதல் எனது தலைமையில் நடைபெற உள்ளது.
இதையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான ஒற்றைச்சாளர முறையிலான சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற உள்ளது. அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டை பதிவு மற்றும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு ஆகியவை மேற்கொள்ளப்படும்.
மேற்குறிப்பிட்ட உதவிகளை பெறுவதற்கு ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனியாக பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 4, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் முகாமில் கலந்துக்கொண்டு பயன் பெறலாம். ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றவர்களுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் மாத உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வங்கிக்கடன் உதவி மற்றும் பிற அரசு உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்களும், ஆலோசனைகளும் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.