தமிழக செய்திகள்

மெகா தடுப்பூசி முகாம்: 20.05 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - சுகாதாரத்துறை தகவல்

மெகா தடுப்பூசி முகாமில் இதுவரை 20.05 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதலில் சுகாதாரப் பணியாளர்களை தொடர்ந்து தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடும் பணி தொடங்கிய முதல் 9 மாதங்களில் 100 கோடி டோஸ் தடுப் பூசி போடப்பட்டு உள்ளது.

தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மிக விரைவாக நடைபெற்று வருகிறது. அதிக பேருக்கு தடுப்பூசி போட வசதியாக ஞாயிற்றுக்கிழமைகளில் பல இடங்களில் கூடுதலாக மையங்கள் அமைத்து மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வந்தது.

அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் 12-ந்தேதி முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற 2-வது முகாமில் 16 லட்சத்து 43 ஆயிரம் பேரும், 3-வது முகாமில் 24 லட்சத்து 85 ஆயிரம் பேரும், 4-வது முகாமில் 17 லட்சத்து 19 ஆயிரம் பேரும், 5-வது முகாமில் 22 லட்சத்து 85 ஆயிரம் பேரும் என மொத்தம் 1 கோடியே 10 லட்சத்து 25 ஆயிரம் பேர் இந்த மெகா தடுப்பூசி முகாம் மூலம் பயன்பெற்று உள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் 6-வது கொரோனா தடுப்பூசி முகாம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமையில் மது அருந்துபவர்களும், மாமிசம் சாப்பிடுபவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளக்கூடாது என்கிற தவறான தகவல் இருப்பதால், அவர்களுக்காக இந்த வாரம் சனிக்கிழமை முகாம் நடத்தப்படுகிறது. 50 ஆயிரம் இடங்களில் நடைபெறும் இந்த முகாமில், 2-வது தவணை தடுப்பூசி போடும் பயனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலம் முழுவதும் தற்போது வரை 20.05 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மெகா தடுப்பூசி முகாமுக்காக கையிருப்பில் இருந்த 66 லட்சம் கொரோனா தடுப்பூசிகள், மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்