சென்னை,
3-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய்யுடன் கர்நாடகா செல்லும் 13 பேர் கொண்ட குழுவின் விவரம் வெளியாகியுள்ளது.
கர்நாடகம்-தமிழகம் இடையே காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக நீண்டகாலமாக பிரச்சினை நீடித்து வருகிறது. குறிப்பாக மழை பொய்த்து போகும் காலங்களில் இந்த பிரச்சினை தலை தூக்கி வருகிறது. நடப்பாண்டும் கர்நாடகத்தில் போதிய மழை பெய்யாததால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்குவதில் பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது.
இதற்கிடையே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டவும் கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என முதல்-அமைச்சர் விஜய் கருதுகிறார். எனவே அவர் காவிரி நதி நீர் விவகாரம், மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை சந்தித்து பேச முடிவு செய்து கடிதம் அனுப்பியுள்ளார். இதற்காக முதல்-அமைச்சர் விஜய் வருகிற 3-ந்தேதி (திங்கட்கிழமை) பெங்களூருவுக்கு செல்கிறார்.
பெங்களூரு விதானசவுதா (சட்டசபை வளாகத்தில்) மாநாட்டு அரங்கில் டி.கே.சிவக்குமார், விஜய்யை சந்தித்து பேச உள்ளார். இந்த பேச்சுவார்த்தைக்கு தமிழ்நாடு விவசாயிகளும், அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதுபோல் கர்நாடக விவசாயிகளும், கன்னட அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், தலைமைச் செயலாளர், துறைகளின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், 3-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய்யுடன் கர்நாடகா செல்லும் 13 பேர் கொண்ட குழுவின் விவரம் வெளியாகியுள்ளது. அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் தலைமைச் செயலாளர் சாய்குமார், நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு, காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் உள்ளிட்டோர் முதல்-அமைச்சருடன் கர்நாடகா செல்கின்றனர். 3-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு கர்நாடகா செல்ல இந்த குழு திட்டமிட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் உமாபதியும் முதல்-அமைச்சர் விஜய்யுடன் கர்நாடகா செல்ல உள்ளார்.