சென்னை,
இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்ததை நினைவுகூறும் விதமாக கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி தினத்தை அனுசரிக்கின்றனர். நாளை புனித வெள்ளி கொண்டாடப்படும் நிலையில், அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் புனித வெள்ளியை முன்னிட்டு நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
புனித வெள்ளியை முன்னிட்டு நாளை (03-04-2026) சனிக்கிழமை அட்டவணை பின்பற்றப்படும். காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை பின்வரும் கால இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும். காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.