சேலம்,
கர்நாடகத்தின் குடகு மாவட்டத்திலும், கேரளாவின் வயநாடு பகுதியிலும் தொடர்ந்து பெய்த பலத்த மழையின் காரணமாக மைசூரு அருகே உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கும் மற்றும் கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக அந்த அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததால், அவற்றில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
நேற்று முன்தினம் மாலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடியாக இருந்தது. நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று இரவு 2 லட்சத்து 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. நீர்வரத்து அதிகரித்து இருப்பதால், அணை வேகமாக நிரம்பி வருகிறது.கடந்த 9-ந் தேதி அணையின் நீர்மட்டம் 54 அடியாக இருந்தது. கடந்த 4 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் சுமார் 40 அடிக்கும் மேலாக உயர்ந்து இருக்கிறது.
தண்ணீர் திறப்பு
போதிய நீர் இருப்பு இருந்தால் காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை ஆண்டு தோறும் ஜூன் 12-ந் தேதி திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு போதிய அளவுக்கு நீர் இல்லாததால் ஜூன் 12-ந் தேதி அணை திறக்கப்படவில்லை. தற்போது நீர்மட்டம் 100 அடியை எட்டிவிட்டதால், பாசனத்துக்காக அணை இன்று திறக்கப்பட்டது.
முதல் அமைச்சர் பழனிசாமி அணையை திறந்து வைத்தார். முதல் கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. படிப்படியாக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வரை உயர்த்தப்படும். மேட்டூர் அணையில் திறக்கப்பட்டுள்ள நீர் 3 நாள்களில் கல்லணையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணை திறப்பு மூலம் டெல்டா பகுதியில் 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும். கால்வாய் பாசனத்தின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும்.