சேலம்,
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 4-ந்தேதி இரவு மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 19 ஆயிரத்து 264 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.
அதன்படி நேற்று மாலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13 ஆயிரத்து 674 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 77.57 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த 4-ந்தேதி அணையின் நீர்மட்டம் 73.08 அடியாக இருந்தது. கடந்த 4 நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4½ அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.