தமிழக செய்திகள்

மிலாதுநபி திருநாள் -அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

நபிகள் நாயகம் கற்பித்த உண்மையையும், ஒழுக்கத்தையும் அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

மிலாது நபி திருநாள்

இஸ்லாமியர்களால் உயிரினும் மேலாக நேசிக்கப்படும் இறைத்தூதர் முகமது நபியின் பிறந்த நாளை மிலாது நபி திருநாளாக கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆறு வயதில் தாயை இழந்த நபிகள் தமது இளம் வயதில் வறுமையின் கொடுமைகளை அனுபவித்தார். நாற்பது வயதில் இறைத்தூதுகளை பெறத் தொடங்கிய அவர், அடுத்த 23 ஆண்டுகளுக்கு அற்புதங்களை நிகழ்த்தினார். வறுமையிலும் அவர் செம்மையாகவும், தூய்மையாகவும், அழுக்காறு இன்றியும், உண்மை மட்டுமே உரைத்தும், எவரிடத்தும் கோபம் கொள்ளாமலும், பேராசையின்றியும், அன்பு செலுத்தியும் வாழ்ந்தார். அதனால் தான் அவரது வாழ்க்கை வரலாறாக மாறியிருக்கிறது. உலகில் உள்ள அனைவரும் பின்பற்றத்தக்க உன்னதமான பாடமாக இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கைப் போற்றப்படுகிறது.

போற்றத்தக்க பாடம்

போதனையும், பின்பற்றலும் இணைந்து செல்வது மிகவும் அரிது. ஆனால், தாம் கடைபிடித்ததை மட்டுமே போதனையாக வழங்கினார் நபிகள் நாயகம். இறை நம்பிக்கை, பாவமன்னிப்பு கோருதல், தொழுதல், உதவி புரிதல், பிறரை ஏமாற்றாமல் இருத்தல் மற்றும் செல்வத்தில் நாட்டம் இல்லாமல் இருத்தல், கற்பு மற்றும் பெண் சிசுவதைக்குத் தடை என்ற வழியில் பயணித்த நபிகள் நாயகத்தின் வாழ்க்கை என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமே போற்றத்தக்க பாடம் ஆகும்.

நபிகள் நாயகம் கற்பித்த உண்மையையும், ஒழுக்கத்தையும் அனைவரும் கடைபிடிக்க வேண்டும். உலகில் அமைதி, வளம், மனநிறைவு, மகிழ்ச்சி, ஒற்றுமை, சகோதரத்துவம், பிறருக்கு உதவும் குணம், கொடை ஆகியவையும் நிறைய வேண்டும் என்று கூறி, மீண்டும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.