சென்னை,
மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் க. அருண் ராஜ் இன்று கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் திடிர் ஆய்வு மேற்கொண்டார்.
கீழ்ப்பக்கம் அரசு மருத்துவமனையில் உயர் சிறப்பு சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, பார்வையாளர்கள் தங்கும் விடுதி, ஒருங்கிணைந்த அவசரகால தாய் சேய் பராமரிப்பு பிரிவு, அம்மா உணவகம் மற்றும் கல்லூரி மாணவர் விடுதி ஆகிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாண்புமிகு அமைச்சர், மருத்துவமனையின் கழிவறைப் பகுதிகளை எப்பொழுதும் தூய்மையாக பராமரிக்க அலுவலர்களுக்கும், ஒப்பந்ததாரருக்கும் அறிவுறுத்தினார்.
மேலும் உயர் சிறப்பு சிகிச்சை பிரிவு கழிவறை பகுதிகளை தூய்மையாக பராமரிக்காத ஒப்பந்ததாரருக்கு விளக்கம் கேட்டு தாக்கீது வழங்கவும் உத்தரவிட்டார். தொடர்ந்து, அமைச்சர் மருத்துவமனையின் பழைய மகப்பேறு கட்டிடப் பகுதிகளில் உள்ள குழாய்களில் ஏற்பட்டுள்ள நீர் கசிவினை உடனடியாக சீர்செய்ய பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக வரும் பொது மக்களின் பதிவுகள் மேற்கொள்ளும் முறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு அரசின் சிறந்த முன்னெடுப்பான “நலம் AI” whatsapp செயலி குறித்து விழிப்புணர்வு பதாகைகளை புறநோயாளிகள் பிரிவின் வெளிப்புற பகுதிகளில் காட்சிப்படுத்தவும், அச்செயலி குறித்து மருத்துவமனை பணியாளர்கள் அல்லது தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கி, அதன் மூலம் பொதுமக்களுக்கு புறநோயாளிகளுக்கான பதிவினை “நலம் AI” மூலம் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மருத்துவமனை முதல்வரிடம் தெரிவித்தார்.
மேலும் புறநோயாளிகள் பிரிவில் இருந்த பொதுமக்களிடம் மருத்துவமனையில் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். மருத்துவமனை முதல்வர் மற்றும் நிலைய அலுவலர் ஆகியோரை புறநோயாளிகள் பிரிவினை முழுவதுமாக ஆய்வு மேற்கொண்டு, இப்பிரிவில் உள்ள குறைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சர் அறிவுறுத்தினார்.
சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக இடிக்கப்பட்ட ஒருங்கிணைந்த அவசரகால தாய் சேய் பராமரிப்பு பிரிவின் ஒரு பகுதியை மறு சீரமைப்பது குறித்து மருத்துவத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின்போது கட்டடத்தின் நிலைத்தன்மை குறித்த சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) சான்றிதழை பெறவும் அறிவுறுத்தினார்.
பின்னர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர், பொதுமக்களுக்கு சமைக்கப்பட்ட உணவின் தரத்தினை சுவைத்து பார்த்து ஆய்வு செய்தார். காலையில் 500 நபர்களுக்கு இட்லி மற்றும் பொங்கல் சமைக்கப்பட்டதாகவும், மதியம் 400 நபர்களுக்கு சாம்பார் சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் சமைக்கப்பட்டதாகவும் பணியாளர்கள் தெரிவித்தனர். இந்த உணவு வகைகளுடன் கூடுதலாக தயிர் சாதம் சமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், அம்மா உணவக வளாகத்தில் உள்ள தேவையற்ற, பழுதடைந்த பொருட்களை அப்புறப்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதார துறை அலுவலர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.
இதன் பின்னர் அமைச்சர் அருண் ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
”தரமான மருத்துவ சேவைகள் அனைத்து பொதுமக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்தை நோக்கமாக கொண்டு முதலமைச்சர் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக “நலம் AI” Whatsapp chatbot அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இந்த செயலியை 1,25,000 நபர்கள் பயன்படுத்தி உள்ளனர். இச்சேவை 22 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக 22 மாவட்டங்களில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு பொது மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள் பதிவு செய்து கொள்ளலாம். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் நெஞ்சக நோய் பிரிவில் மருத்துவர் சந்திப்பு பதிவு (Appointment Booking) வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது. நெஞ்சக நோய் பிரிவில் மட்டும் இதுவரை 500 நபர்கள் அப்பாயிண்ட்மெண்ட் பதிவு செய்து சேவையை பயன்படுத்தி உள்ளனர். இச்சேவை விரைவில் மற்ற மாவட்டங்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம் புறநோயாளிகள் காத்திருப்பு நேரம் குறையும்.
முதலமைச்சரால் தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளைக்கு (Health Foundation) நன்கொடை பெற "நலம் TN" என்ற இணையதள சேவையை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரிய தொழில் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் நன்கொடை வழங்கலாம். அரசு மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த பலர் நன்கொடை வழங்கியுள்ளனர். நலம் TN தொடங்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே இதுவரை ரூ. 2.80 கோடி, நன்கொடை கிடைத்துள்ளது. இந்த தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளைக்கு பெறப்படும் நன்கொடை 100% வெளிப்படை தன்மையுடன் இருக்கும். பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் வழங்கும் ஒவ்வொரு ரூபாயும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக முழுவதுமாக பயன்படுத்தப்படும்.
தற்பொது நீட் தேர்வு (NEET) முடிவுகள் வந்துள்ளது.. அதில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் வாழ்த்துக்கள். வெற்றி பெற முடியாத மாணவர்கள் மனம் உடைந்து போகத் தேவையில்லை. கண்டிப்பாக அவர்களுக்கான வாய்ப்புகள் நிறைய உள்ளது. தேர்வில் வெற்றி பெற முடியாத மாணவர்களுக்கு மனம் வருத்தம் இருக்கும். வெற்றி பெற முடியாத மாணவர்களளுக்கு பெற்றோர் உறுதுணையாக இருக்க வேண்டும். மனநல ஆலோசனைகள் தேவைப்படும் மாணவர்கள் அரசின் 104 உதவி உண்ணில் தொடர்பு கொண்டு ஆலோசனைகள் பெறலாம்.
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்களை வருகின்ற ஜூலை 23ஆம் தேதி மாலை 5 மணி வரை வழங்கலாம். அதன் பிறகு கலந்தாய்விற்க்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். தற்பொழுது தமிழ்நாட்டில் மருத்துவ துறையின் சரியான முன்னெடுப்புகளின் காரணமாக மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 இடங்கள் வீதம் 150 இடங்கள் கூடுதலாக கிடைக்கப்பெற்றுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு மொத்தம் 13,999 மருத்துவ இடங்கள் உள்ளது. அதில் அரசு மருத்துவ கல்லூரிகளில் மட்டும் 5,349 இடங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் 8,650 இடங்களும் உள்ளன. இந்த ஆண்டு மட்டும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 950 இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளது.
மாலை நேர அம்மா கிளினிக் தொடங்குவது குறித்து முதலமைச்சர் நிதிநிலை அறிக்கையில் தெரிவிப்பார்கள். இது மக்களுக்கு தேவையான ஒரு திட்டம்.”
இவ்வாறு அவர் பேசினார்.