தமிழக செய்திகள்

எம்.எல்.ஏ. ஆக தேர்வான சான்றிதழை மறந்துவிட்டு சட்டசபைக்கு வந்த அமைச்சர் கீர்த்தனா

17வது சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை பிடித்த தமிழக வெற்றிக் கழகம், கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-அமைச்சராக அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று பதவியேற்றார். அவருடன் ஒன்பது அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். தற்காலிக சபாநாயகராக, சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ., கருப்பையா தேர்வு செய்யப்பட்டார். கருப்பையாவுக்கு கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும், தற்காலிக சபாநாயகர் கருப்பையா, பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதலாவதாக பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதவியேற்றார். தொடர்ந்து ஒவ்வொரு எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொண்டனர். புதிய எம்எல்ஏக்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.

இந்தநிலையில், தவெக அரசின் அமைச்சர் கீர்த்தனா, எம்.எல்.ஏ. ஆக தேர்வான சான்றிதழை எடுத்து வராததால் சட்டப் பேரவையில் உறுப்பினராக பதவியேற்கவில்லை. இதனால், பிற அமைச்சர்களுடன் அவர் உறுப்பினராக பதவியேற்க முடியாமல் போனது. சான்றிதழை கொடுத்த பிறகு பதவியேற்றுக் கொள்வார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.