சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி, சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-142க்குட்பட்ட சைதாப்பேட்டை பஜார் சாலையில் உள்ள சென்னை தொடக்கப் பள்ளியில், மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு நிதியில் ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பள்ளிக் கட்டிடத்தினை இன்று (03.02.2026) பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
இந்த பள்ளிக் கட்டிடமானது 4,200 சதுர அடி பரப்பளவுடன், 3 வகுப்பறைகள், சமையலறை, கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சாமியார் தோட்டம் பகுதியில் மூலதன நிதியில் அமைக்கப்பட்ட 8 மீட்டர் உயரமுள்ள புதிய உயர்கோபுர மின்விளக்கினைப் பயன்பாட்டிற்கு ஒளிரச் செய்தார்.
பின்னர், காரணீஸ்வரர் கோவில் தெருவில் மூலதன நிதியில் ரூ13.60 லட்சம் மதிப்பீட்டில் 28 எண்ணிக்கையிலான தெரு மின் விளக்குகளைப் பயன்பாட்டிற்கு ஒளிரச் செய்தார்.
இந்நிகழ்ச்சிகளில், மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர்.கௌஷிக், மண்டலக் குழுத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.