சென்னை,
தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் ஐஐடி சென்னை இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்காக மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக இன்று ஐஐடி சென்னை வளாகத்திற்கு நேரில் சென்று பல்வேறு நவீன மின்சார தொழில்நுட்பங்களை ஆய்வு செய்தார்.
அப்போது, Innovation Hub, தூய்மை எரிசக்தி ஆய்வகம் (Clean Energy Lab), திரவ மின்கல ஆய்வகம் (Flow Battery Lab ),மின்கல மறுசுழற்ச்சிக்கான உயிரித்தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் 1 மெகாவாட் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு ஆகியவற்றை பார்வையிட்டு, மின்சார சேமிப்பு தொழில் நுட்பங்கள், பேட்டரி மறுசுழற்சி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பு மற்றும் மின் கட்டமைப்பு மேலாண்மை தொடர்பாக ஐஐடி ஆராய்ச்சியாளர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி பசுமை எரிசக்தி மாநிலமாக மாற்றும் நோக்கில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
* உலகத்தரத்திலான Battery Energy Storage System (BESS) மற்றும் பேட்டரி மறுசுழற்சி தொடர்பான விரிவான புதிய கொள்கை, ஐஐடி சென்னை நிபுணர்களுடன் இணைந்து விரைவில் வெளியிடப்படும்.
* மின்கட்டமைப்பின் தேவையை கருத்தில் கொண்டு, Load Flow ஆய்வின் அடிப்படையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு வெளிப்படையான மற்றும் அறிவியல் சார்ந்த அனுமதி நடைமுறை செயல்படுத்தப்படும்.
* முன்பிருந்த நிலுவை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விண்ணப்பங்கள் உரிய தொழில்நுட்ப ஆய்வுக்கு பின் விரைவாக பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
* வீட்டு மாடி சூரியமின் திட்டங்களை விரைவுபடுத்தும் வகையில், பொதுமக்கள் எளிதில் பயன்பெறும் புதிய கொள்கை, எளிய அனுமதி நடைமுறை மற்றும் ஒருங்கிணைந்த செயலி அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் மானியம், மீட்டர் பொருத்துதல், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஒரே தளத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
* அதிகரித்து வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை திறம்பட ஒருங்கிணைத்து, காலை மற்றும் மாலை உச்ச மின் தேவையை திறமையாக சமாளிக்க BESS தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆய்வுப் பயணம், தமிழ்நாட்டில் தடையற்ற மின் விநியோகம், மேம்பட்ட மின் வலையமைப்பு, தூய்மையான எரிசக்தி பயன்பாடு மற்றும் எதிர்கால தொழில் நுட்பங்களை நடைமுறைப்படுத்தும் அரசின் உறுதியான முன்னெடுப்பாக அமையும். ஐ.ஐ.டி பேராசிரியர்கள் சத்ய நாராயணன் சேஷாத்திரி, நிதின் முரளிதரன் மற்றும் மரபு சாரா எரிசக்தி தலைமை பொறியாளர். பி.ஜி. கலைவாணி உடனிருந்தனர்.