தமிழக செய்திகள்

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக பேராசிரியர் தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

தினத்தந்தி

தஞ்சாவூர்,

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளுக்கு அண்மையில் பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக சிலர் புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தஞ்சையில் நடந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பாண்டியராஜனிடம், இந்த முறைகேடு புகார் தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

முறைகேடு நடைபெறவில்லை

இது சம்பந்தமாக தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் இன்று (நேற்று) காலை ஆய்வு செய்தோம். பேராசிரியர் தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. ஒரேயொரு பணியிடத்திற்கு அந்த துறையை சேர்ந்தவர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். மற்றவர்களை தேர்வு செய்யக்கூடாது என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி அந்த பணியிடத்திற்கு மறு விளம்பரம் செய்யப்படும்.

ஏற்கனவே பேராசிரியர் அல்லாத பணியாளர்கள் 29 பேர் தேர்வு செய்யப்பட்டு பணியில் சேர்ந்துள்ளனர். பேராசிரியர் பணிக்காக 450 பேர் நேர்முக தேர்வுக்கு வந்திருந்தனர். இவர்களுக்கு 10 பேர் கொண்ட குழு என்ன மதிப்பெண் கொடுத்தார்களோ அந்த அடிப்படை தகுதியின் படி தான் நியமிக்கிறோம். இடஒதுக்கீடு, ஸ்லெட் தேர்வு உள்ளிட்டவைகளுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறது. இதை நானே நேரில் ஆய்வு செய்தேன்.

தகுதியின் அடிப்படையில் தேர்வு

எந்த முறைகேடுடுக்கும் வாய்ப்பு இல்லாமல் தகுதியின் அடிப்படையில் 20 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதல்-அமைச்சரிடம் கையெழுத்துக்காக நியமன ஆணை காத்து இருக்கிறது. 20 பேருக்கும் விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும்.

முறைகேடு புகார் தெரிவித்த 4 பேரையும் அழைத்து பேசினேன். அவர்கள் சொன்ன பல கருத்துகள் முன்னுக்கு பின் முரணாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு