சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
ஜப்பான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (Japan Science and Technology Agency – JST) சார்பில் செயல்படுத்தப்படும் “சகுரா சயின்ஸ் உயர்நிலைப்பள்ளி பரிமாற்றத் திட்டம் – 2026” (Sakura High School Programme – JFY 2026) என்ற சர்வதேச கல்வி மற்றும் அறிவியல் பரிமாற்றத் திட்டத்தில் பங்கேற்க தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 மாணவர்கள் மற்றும் 1 1 ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஜப்பான் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அந்நாட்டின் மேம்பட்ட அறிவியல், தொழில்நுட்பம், கல்வி முறை மற்றும் கலாச்சார அனுபவங்களை நேரடியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில் (South India Science Fair – SISF) சிறப்பாகப் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களில் இருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த கீழ்க்காணும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்:
| வ. எண் | பெயர் | பள்ளி | மாவட்டம் |
|---|---|---|---|
| 1 | வி. ரோகித் குமரன் | அரசு மாதிரி பள்ளி, வேப்பலோடை | தூத்துக்குடி |
| 2 | ஆர். அர்னால்ட் ஜாக் ஆலிவர் | அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, கூடலூர் | நீலகிரி |
| 3 | எம். லக்ஷிதா | அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, மறைமலை நகர் | செங்கல்பட்டு |
| 4 | எம். கனிஷ்கா | அரசு மேல்நிலைப் பள்ளி, கணபதிபாளையம் | ஈரோடு |
| 5 | என். மாலை ஈஸ்வரி (மேற்பார்வையாளர்) | எஸ்.என்.வி. அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, எமனேஷ்வரம் | இராமநாதபுரம் |
இத்திட்டம் 24.05.2026 முதல் 30.05.2026 வரை நடைபெறுகிறது. இந்திய அளவில் மொத்தம் 56 மாணவர்களிள் தமிழ்நாட்டை சார்ந்த 4 மாணவர்கள் மற்றும் 4 ஆசிரியர்கள் என 60 பேர் பங்கேற்கின்றனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மேற்காணும் மாணவர்கள் மற்றும் மேற்பார்வையாளர் அவர்கள், 22.05.2026 (வெள்ளிக்கிழமை) அன்று பிற்பகல் 1.00 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி வழியாக ஜப்பான் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். இப்பயணம் நிறைவடைந்து, அவர்கள் 31.05.2026 அன்று சென்னை திரும்ப உள்ளனர்.
இத்தகைய சர்வதேச அறிவியல் பரிமாற்றத் திட்டங்களில் தமிழ்நாட்டு மாணவர்கள் தொடர்ந்து சிறப்பாக பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது. இத்திட்டம்
மாணவர்களின் அறிவியல் ஆர்வம், புதுமைத்திறன் மற்றும் உலகளாவிய பார்வையை மேம்படுத்தும் வகையில் அமையும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தர மோகன். பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ் ஆகியோர் உள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.