தமிழக செய்திகள்

3 மாதத்தில் ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்

கூட்டணி என்கிற பெயரில் கூட்டணி கட்சியின் முதுகில் ஏறி சவாரி செய்தது திமுகஎன அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.

சென்னை,

தவெக ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில் அளித்துள்ளார். மதுரையில் இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:-

அமைச்சரவையில் இடம்

முன்னாள் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அப்படி கூறியிருக்கக் கூடாது. அதனை அவர் தவிர்த்திருக்கலாம்.

நம்மைப் பொருத்தவரையில், சொன்னபடியே கூட்டணியில் இருப்பவர்களுக்கும் அமைச்சரவையில் முதல்-அமைச்சர் விஜய் இடம் அளித்திருக்கிறார்.

அமைச்சர் வன்னி அரசுக்கு அமைச்சரவையில் இடம் அளித்திருப்பது, தனி மனிதனுக்கானது அல்ல. அது நீண்ட, நெடுங்காலமாக ஒடுக்கப்பட்டிருக்கும் மக்களுக்கான ஓர் அங்கீகாரம்.

அதுபோல, இந்திய விடுதலைக்குப் பிறகு முதன்முறையாக இந்திய முஸ்லீம் கட்சி அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறது. இது குரலற்றவர்களுக்கு குரலாக இருப்பதற்கான அடையாளம்.

முதுகில் ஏறி சவாரி

கூட்டணி என்கிற பெயரில், அவர்களின் முதுகில் ஏறி சவாரி செய்துவிட்டு, அவர்களின் வாக்குகளை மட்டும் வாங்கிவிட்டு, அவர்களுக்கான அங்கீகாரத்தை மட்டும் இவ்வளவு காலமாக தராமல் இருந்தனர். தமிழக அரசியல் வரலாற்றில் இதனை முதன்முறையாக முதல்-அமைச்சர் விஜய் நிறைவேற்றியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.