அமைச்சர் சரத்குமார்- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா 
தமிழக செய்திகள்

மதுராந்தகம் தொகுதி தேர்தல் பணியில் மாவட்ட அமைச்சர் சரத்குமாருக்கு இடமில்லை– தவெக வட்டாரத்தில் பரபரப்பு

இடைத்தேர்தலில் முதல் வெற்றியைப் பதிவு செய்ய தவெக தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

சென்னை,

மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலின் முதன்மைப் பொறுப்பு, செங்கல்பட்டு மாவட்ட அமைச்சர் சரத்குமாருக்கு வழங்கப்படாமல் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுராந்தகம் இடைத்தேர்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு வரும் அக்டோபர் 6, 2026 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வெளியிட்டுள்ள தேர்தல் பணிக்குழு பட்டியல் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

குறிப்பாக, செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பு அமைச்சரான டி.சரத்குமார் தேர்தல் பணிகளில் ஓரம்கட்டப்பட்டு, அவருக்குப் பதிலாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு முதன்மைப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.

அதிமுகவிலிருந்து வந்த வேட்பாளர்

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில், அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி கட்சியில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். இடைத்தேர்தலில் முதல் வெற்றியைப் பதிவு செய்ய தவெக தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

சரத்குமார் ஓரம்கட்டப்பட்டதாக கூறப்படுவது ஏன்?

பொதுவாக ஒரு மாவட்டத்தில் தேர்தல் அல்லது இடைத்தேர்தல் நடக்கும்போது, அந்த மாவட்ட பொறுப்பு அமைச்சரிடமே தேர்தல் பொறுப்புகள் முழுமையாக ஒப்படைக்கப்படுவது வழக்கம். தவெக அமைச்சரவையில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சராக உள்ள தாம்பரம் தொகுதி எம்.எல்.ஏ டி. சரத்குமார் தான், மதுராந்தகம் உள்ளடங்கிய செங்கல்பட்டு மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராகவும் உள்ளார்.

ஆனால், தவெக தலைமை தற்போது வெளியிட்டுள்ள மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பணிக்குழுப் பட்டியலில், பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான ஆதவ் அர்ஜுனா முதன்மைப் பொறுப்பாளராக (தேர்தல் பணிக்குழுத் தலைவர்) நியமிக்கப்பட்டுள்ளார். உள்ளூர் மாவட்ட அமைச்சரான சரத்குமாருக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்படாததால், அவர் தேர்தல் பணிகளில் இருந்து தவெக தலைமையால் ஓரம்கட்டப்பட்டு விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கட்சித் தரப்பு விளக்கம் -சரத்குமாரின் நிலைப்பாடு

இந்த சர்ச்சை குறித்து தவெக தரப்பில் விசாரித்தபோது, "அமைச்சர் சரத்குமார் ஓரம்கட்டப்பட்டார் என்பதில் உண்மையில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளராக இருப்பதால், ஒட்டுமொத்த தேர்தல் வியூகங்களின் அடிப்படையில் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது" என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தன் மீதான அரசியல் வியூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைச்சர் சரத்குமார், மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என தனது சமூக வலைதளப் பக்கங்கள் வாயிலாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டு, வேட்பாளரின் வெற்றிக்காகத் தீவிரமாக உழைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் ஆதரவாளர்கள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாவட்ட அமைச்சரைத் தாண்டி தவெக தலைமை எடுத்துள்ள இந்த முடிவு, செங்கல்பட்டு மாவட்ட அரசியல் களத்தில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

SCROLL FOR NEXT