சென்னை,
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
இலங்கை தமிழர்களின் துயர் குறித்து 20 ஆண்டுகளுக்கும் மேல் பத்திரிகையுலகில் எழுதிவந்த அன்புக்குரிய ஆர். கே. ராதாகிருஷ்ணன், 30 ஆண்டுகளுக்கும் மேலாக மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கை தமிழரின் வாழ்க்கை குறித்து முகமற்றவர்கள் (FacelessPeople) எனும் ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். அதனை பார்த்தேன்; நெகிழ்ந்தேன்!
இலங்கை தமிழர்களுக்கான இந்திய குடியுரிமையை தெளிவாக வலியுறுத்தும் இந்த ஆவணப்படத்தை உணர்வுடனும், பொறுப்புடனும் இயக்கிய ஆர்.கே. பாராட்டுகள்! வாழ்த்துகள்!
திராவிட மாடல் ஆட்சியில், முகாம் வாழ் தமிழர்கள் நலன் காக்க:
மறுவாழ்வு முகாம் எனப் பெயர் மாற்றம், 7 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய வீடுகள், மாதாந்திர பணக்கொடை, துணிமணிகள், பாத்திரங்கள், கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு முகாம், திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்ட வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தினோம்.
அதுமட்டுமின்றி, அவர்களது வாழ்வுரிமைக்கான நீண்டகால தீர்வு குறித்து நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இலங்கை தமிழர்களுக்கான இந்திய குடியுரிமை குறித்த சட்டப்பூர்வ உரிமைகளை வலியுறுத்தி தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றிருந்த போது, மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக 11-01-2026 அன்று பிரதமருக்கு கடிதம் எழுதி வலியுறுத்தினேன்.
தி.மு.க. ஆட்சியில் சட்ட உதவிகள் மூலம் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் 10 பேர் நீதிமன்ற தீர்ப்பினை பெற்று, இந்திய குடிமக்களானதுடன், கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையையும் நிறைவேற்றியுள்ளனர். குடியுரிமை பெற தகுதி உள்ள ஏறத்தாழ 25 ஆயிரம் இலங்கை தமிழர்களுக்காக தி.மு.க எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்புவார்கள்.
தற்போதைய அரசும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்காக திராவிட மாடல் அரசு மேற்கொண்ட திட்டங்களை தொய்வின்றி தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.