தமிழக செய்திகள்

கொளத்தூர் தொகுதி தோல்வியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் வழக்கு

கொளத்தூரில் 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

கொளத்தூர் தொகுதி தோல்வியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

சென்னை,

மு.க.ஸ்டாலின் தோல்வி

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம், முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்றும் மீண்டும் சோதனை செய்ய வேண்டும் என்றும் திமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

மின்னணு எந்திரங்கள் ஆய்வு

நீதிமன்ற உத்தரவுப்படி, கொளத்தூரில் 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரங்களை ஆய்வு செய்யும் பணி கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கின. சென்னை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநாராட்சி ஆணையருமான சமீரன் முன்னிலையில் 3 நாட்கள் ஆய்வுப் பணிகள் நடைபெற்றன.

இதையடுத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநாராட்சி ஆணையருமான சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி தேர்வு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஆய்வு, சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. மாதிரி வாக்குப்பதிவின் முடிவுகள் மற்றும் விவிபேட் சீட்டுகள் சரிபார்க்கப்பட்டதில், எந்தவித முரண்பாடும் இல்லாமல் அனைத்தும் சரியாக இருந்தது உறுதி செய்யப்பட்டது.

சரிபார்ப்பு பணியின் போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் முழுமையாக விளக்கிக் காண்பிக்கப்பட்டன. விண்ணப்பதாரர் வேட்பாளரின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பிற போட்டியிட்ட வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் எழுப்பிய அனைத்து சந்தேகங்களுக்கும் உரிய விளக்கங்கள் உடனுக்குடன் அளிக்கப்பட்டன.

ஆய்வு மற்றும் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், இந்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ள சரிபார்ப்பு நடைமுறைகளின்படி முறையாக செயல்படுகின்றன என்று பெல் நிறுவன பொறியாளர்களால் சான்றளிக்கப்பட்டுள்ளது. அச்சான்றிதழின் நகல் விண்ணப்பதாரர் வேட்பாளருக்கு வழங்கப்பட்டது" என்று தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் வழக்கு

இந்த நிலையில், கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தொடர்ந்துள்ள வழக்கில்,

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில், தவெக சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆய்வு செய்ய தேர்தல் ஆணையத்தின் அனுமதி கேட்கப்பட்டது. அனுமதி பெற்றவுடன் அதன் அடிப்படையில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ தலைமையிலான வழக்கறிஞர்கள் சிந்தாதிரிப்பேட்டையில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்தனர்.

பல்வேறு முறைகேடுகள்...

குறிப்பாக வாக்கு பதிவு மையங்களான 1, 17,28,32,75,78, 79,84,87,112,122 157,170 உள்ளிட்ட வாக்கு சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த விவி பேட், வாக்கு பதிவு எந்திரம், கண்ட்ரோல் யூனிட் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. அப்போது பெல் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்ட என்ஜினீயர் உடன் இருந்தார். நூறு சதவீத விவி பேட் மற்றும் வாக்கு பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது.

இதில் ஆறு வாக்கு சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் விவிபேடுகளை ஒப்புகை சீட்டுகளை ஒப்பிட்டுப் பார்த்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் பிரதிநிதி சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தேர்தல் எந்திரம் தொடர்பாக புகார் செய்வது தொடர்பான வெளிப்படையான ஒரு நடை முறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். பல வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக பல வாக்குப்பதிவு எந்திரங்களில் ஹார்டுவேர் என்று சொல்லக்கூடிய மென்பொருள் கோளாறு ஏற்பட்டது.

வி.எஸ்.பாபு வெற்றி செல்லாது என அறிவிக்க...

தொழில்நுட்ப கோளாறுகளை சுட்டிக்காட்டிய பின்பும் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படிதான் சோதனை மற்றும் சரிபார்த்தல் நடைபெற்றுள்ளது.

எனவே பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவி பேடுகளை சரிபார்க்க வேண்டும். மேலும், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும், நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.