தமிழக செய்திகள்

திமுக எம்பிக்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 20 ஆம் தேதி தொடங்கும் நிலையில், லண்டனில் இருந்தவாறு மு.க.ஸ்டாலின் தி.மு.க. எம்.பி.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 20 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மசோதக்களை நிறைவேற்ற மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை அவசியம் என்பதால், எதிர்க்கட்சி எம்பிக்களின் ஆதரவை பெற பாஜக முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், திமுக எம்பிக்களுடன் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். லண்டன் சென்றுள்ள ஸ்டாலின் அங்கிருந்து காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துவதாக சொல்லப்படுகிறது. விரைவில் நாடாளுமன்றம் தொடங்க உள்ள நிலையில், இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

மேகதாது அணை கட்டும் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டுக்குள்ள நியாயமான உரிமையைக் காக்கவும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரத்துக் குரலெழுப்புவார்கள்.

ஒன்றிய அரசு கொண்டு வரும் எந்தப் புதிய சட்டமாக இருந்தாலும் மாநில உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தினையும் பாதுகாத்திடும் வகையிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு இருக்கும். தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாய் ஒவ்வொரு DMK MP-யும் செயல்படுவார்கள்!' என்று பதிவிட்டுள்ளார்.