தமிழக செய்திகள்

ரேஷன் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் - மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வினியோகிக்கப்பட உள்ளன. இந்த திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்தவகையில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட 21 பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அரிசி ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டன. குறிப்பாக இந்த பரிசு தொகுப்பில் இடம் பெற்றுள்ள நெய் ஆவின் நிர்வாகத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பின்னர் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு கடந்த வார இறுதியில் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொருட்களை வினியோகிக்க வேண்டும் என்று ரேஷன் கடை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொங்கல் தொகுப்பு பொதுமக்களுக்கு நெரிசல் இல்லாமல் வழங்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக இந்த ஆண்டும் டோக்கன் முறை பின்பற்றப்படுகிறது.

இந்தநிலையில் பொங்கல் பரிசுத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து இன்று முதல் 10-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு நாட்களில் நேரத்தை குறிப்பிட்டு வழங்கப்பட்டிருக்கும் டோக்கன் அடிப்படையிலும், தினமும் 200 ரேஷன்கார்டுகள் வீதம் பொருட்களை வழங்கவும் கடை ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களை சமூக இடைவெளி, கிருமி நாசினி, முககவசம் போன்றவற்றை கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும் எனவும் சுற்றறிக்கை ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து உணவு வழங்கல்துறை அதிகாரிகள் கூறுகையில், வருகிற 10-ந்தேதிவரை பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்கப்படுகிறது. இந்த நாட்களில் வாங்க முடியாதவர்கள் 10-ந்தேதிக்கு பின்னர் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் சிரமமின்றி பொருட்கள் வாங்கி செல்லலாம். பண்டிகை முடிந்த பிறகும் கூட தங்களுக்கான பொருட்களை பெற்றுச்செல்லலாம் என்று தெரிவித்தனர்.

என்னென்ன பொருட்கள்?

பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெற்றுள்ள 21 பொருட்களின் விவரம் வருமாறு:-

பச்சரிசி - 1 கிலோ

வெல்லம் - 1 கிலோ

முந்திரி - 50 கிராம்

திராட்சை - 50 கிராம்

ஏலக்காய் - 10 கிராம்

பாசிப்பருப்பு - 500 கிராம்

நெய் - 100 கிராம்

மஞ்சள் தூள் - 100 கிராம்

மிளகாய்தூள் - 100 கிராம்

மல்லித்தூள் - 100 கிராம்

கடுகு - 100 கிராம்

சீரகம் - 100 கிராம்

மிளகு - 50 கிராம்

புளி - 200 கிராம்

கடலைபருப்பு - 250 கிராம்

உளுத்தம்பருப்பு - 500 கிராம்

ரவை - 1 கிலோ

கோதுமை மாவு - 1 கிலோ

உப்பு - 500 கிராம்

கரும்பு - 1 (முழுமையானது)

துணிப்பை - 1

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து