தமிழக செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ.11.14 கோடியில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் திட்டம் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் என்ற பெயரில் விவசாயிகளுக்கு ரூ.11.14 கோடியில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

தினத்தந்தி

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச்செயலகத்தில், தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் என்ற புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டத்தினை ரூ.11.14 கோடி மதிப்பில் 73 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வினியோகிப்பதன் தொடக்கமாக விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

இத்திட்டத்தின் கீழ் நடவு செய்யப்படும் மரக்கன்றுகள் எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு ஒரு நிரந்தர வருமானம் கிடைக்க வழிவகுப்பதோடு மண் வளம் அதிகரித்து, மாநிலத்தின் ஒட்டுமொத்த பசுமைப் பரப்பும், சுற்றுப்புறச் சூழலும் மேம்படும்.

ரூ.11.14 கோடி மதிப்பு

விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு வகுத்து, செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, மானாவாரி நிலத் தொகுப்புகளில் பயன்தரும் மரக்கன்றுகளை வளர்க்கும் முதல்-அமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், ஆண்டு முழுவதும் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானமும், வேலைவாய்ப்பும் கிடைக்கும் நோக்கத்துடன், தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் என்ற புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டத்தினை 2021-2022-ம் ஆண்டில் ரூ.11.14 கோடி மதிப்பில் செயல்படுத்திட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், தேக்கு, ஈட்டி, மகோகனி, மருது, வேம்பு, மலை வேம்பு, நாவல், பெருநெல்லி, செம்மரம், புங்கன், வேங்கை, சந்தனம் போன்ற பல்வேறு தரமான மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படும். நடப்பாண்டில், முதற்கட்டமாக 73 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படும்.

இலவசமாக வழங்கப்படும்

இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசு வனத்துறையின் நாற்றங்கால்களில் ரூ.15 மதிப்புள்ள தரமான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

இம்மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களின் வரப்புகளிலோ அல்லது குறைந்த செறிவில் விவசாய நிலங்களிலோ நடவு செய்யலாம். வரப்பில் நடவு செய்வதாக இருந்தால், ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளுக்கு மிகாமலும், விவசாய நிலங்களில் குறைந்த செறிவில் நடவு செய்வதாக இருந்தால் ஏக்கருக்கு 160 மரக்கன்றுகளுக்கு மிகாமலும் வழங்கப்படும்.

பதிவு செய்ய வேண்டும்

மேலும், நடவு செய்த 2-ம் ஆண்டு முதல் 4-ம் ஆண்டு வரை நல்ல முறையில் பராமரிக்கப்படும் கன்று ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.7 வீதம் 3 ஆண்டுகளுக்கு ரூ.21 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இம்மரக்கன்றுகள் நன்கு வளர்ந்து அறுவடை செய்யும்போது, வனத்துறையின் அனுமதியை விவசாயிகள் எளிதில் பெறும் வகையில், நடவுசெய்த மரக்கன்றுகள் அனைத்தும் வருவாய்த்துறையின் அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்யவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள், வேளாண்மை விரிவாக்க மையத்திலோ அல்லது உழவன் செயலி வாயிலாகவோ தங்கள் பெயரை பதிவு செய்து உரிய அலுவலரின் பரிந்துரையின்படி தேவையான மரக்கன்றுகளை அருகிலுள்ள தமிழ்நாடு வனத்துறையின் நாற்றங்காலில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். சிறு குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் எஸ்.நடராஜன், வேளாண்மை இயக்குநர் ஆ.அண்ணாதுரை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரூ.183.73 கோடியில் கட்டிடங்கள்

தமிழகம் முழுவதும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ரூ.183.73 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு மாநில விற்பனை வாரியம் மூலம் காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர், திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர், திருத்தணி மற்றும் ஊத்துக்கோட்டை உள்ளிட்ட இடங்களிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ரூ.147.78 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்குகள், ஏலக்கூடங்கள், சுத்தப்படுத்தி தரம் பிரிக்கும் கூடங்கள், விவசாயிகளுக்கான ஓய்வு அறைகள் மற்றும் விற்பனை அலுவலகங்கள். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் நிலக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் 22 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள்.

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் கட்டப்பட்டுள்ள மாணவியர் படிப்பு மையம், விரிவுரை அரங்கம் மற்றும் தேர்வு அறை; விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூரில் கட்டப்பட்டுள்ள வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மையம், என மொத்தம் ரூ.183.73 கோடி மதிப்பீட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை, தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பொதுப்பணித்துறை சார்பில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் ரூ.1 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொதுப்பணித்துறை கட்டிட (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டம் மற்றும் உபகோட்ட அலுவலக கட்டிடத்தை தலைமைச்செயலகத்தில் இருந்தவாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது