தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர், அமைச்சர், போலீஸ் டி.ஜி.பி. பதவி விலக வேண்டும் மு.க.ஸ்டாலின் பேட்டி

முதல்-அமைச்சர், அமைச்சர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

தினத்தந்தி

சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குட்கா போதைப்பொருட்களால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொடுமையான புற்றுநோய் வருவதற்கு குட்கா போதைப்பொருட்களே காரணம் என்பது நாடறிந்த உண்மை. அதனால் தான் குட்கா விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதும், இப்போது நடைபெறும் அ.தி. மு.க. ஆட்சியிலும் தடைச்செய்யப்பட்ட குட்கா பகிரங்கமாக நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மக்களின் உயிர்களை பலி வாங்கக்கூடிய குட்கா பொருட் களை விற்பனை செய்வதற்கு துணை நின்றவர், அமைச்சர் விஜயபாஸ்கர். அவர் மட்டுமல்ல, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையின் தலைமை பொறுப்பில் இருக்கும் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் மற்றும் முன்னாள் மாநகர கமிஷனர் ஜார்ஜ் ஆகியோருக்கு தொடர்ந்து குட்கா விற்பனைக்கு மாமூல் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று ஆங்கில பத்திரிகையில் ஏற்கனவே ஆதாரங்களுடன் செய்திகள் வெளியாகின.

குட்கா விவகாரத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் மூலம் விசாரணை நடத்தினால் நிச்சயமாக உண்மைகள் வெளிவராது என்பதை தெளிவாக அறிந்து கொண்ட காரணத்தினால், தி.மு.க. சார்பில், எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மூலமாக நாங்கள் நீதிமன்றத்தை நாடினோம். எங்களுடைய சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதாடி, இன்றைக்கு ஒரு தெளிவான தீர்ப்பு வந்திருக்கிறது.

பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த குட்கா விற்பனை தொடர்பான வழக்கில் உயர் அதிகாரிகளும், அமைச்சர்களும் சம்பந்தப்பட்டு இருப்பதால், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற லஞ்ச ஒழிப்புத்துறை மூலமாக விசாரணை நடத்தினால் உண்மைகள் வெளிவராது என்பதால், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறார்கள்.

இந்த உத்தரவை தி.மு.க. சார்பில் நான் மனதார வரவேற்கிறேன். அதேநேரத்தில், இந்த வழக்கு சி.பி.ஐ. அமைப்பால் சுதந்திரமாக விசாரிக்கப்பட்டு, உண்மை நிலவரங்கள் வெளிவர வேண்டுமென்றால், அவர்கள் அனைவரும் முறையாக தண்டிக்கப்பட வேண்டுமென்றால், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருக்கின்ற அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக காவல்துறை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும்.

அதுமட்டுமல்ல, காவல்துறை டி.ஜி.பி.க்கும் இந்த வழக்கில் தொடர்புள்ளதாக வருமான வரித்துறை அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில், அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால், அவருக்கு காலநீட்டிப்பு கொடுத்ததோடு, பதவி உயர்வும் கொடுத்து, அவரை டி.ஜி.பி.யாக நியமித்து இருப்பதே முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான். நியாயமாக, எடப்பாடி பழனிசாமி, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அவரும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் இதையெல்லாம் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுப்போம். அதுமட்டுமல்ல, தி.மு.க. ஆட்சி அமைந்ததும் லோக் ஆயுக்தா சட்டத்தையும் கொண்டு வரவிருக்கிறோம். எனவே, குட்கா விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து, சிறையில் அடைப்போம்.

போராடிக் கொண்டிருக் கும் ஆசிரியர்கள், எங்களை நேரில் வந்து சந்தித்து, அரசின் சார்பில் ஒரு உறுதிமொழி கொடுத்தால் போதும். ஏற்கனவே, 2016-ல் ஜெயலலிதா 110 விதியின் கீழ் உறுதிமொழி கொடுத்திருக்கிறார். அது காப்பாற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. இருந்தாலும், அதேபோன்ற உறுதிமொழியை இப்போதுள்ள ஆட்சியாளர்களும், துறையின் அமைச்சரும் வந்து சொன்னால் போதும், நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம், என்று சொல்லியுள்ளனர். எனவே, அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என நான் தொலைபேசியில் பேச தொடர்பு கொண்டபோது அமைச்சர் கிடைக்கவில்லை என்றாலும், ஊடகங்கள் மூலமாக நான் அமைச்சர் செங்கோட்டையனை மிகுந்த பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு