சென்னை,
தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
2018-19-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஒரு கானல் நீராக அமைந்திருக்கிறது. கண்ணுக்கு தெரிந்து எந்தவொரு திட்டமும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கவில்லை. குறிப்பாக விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள் ஆகியோருடைய முன்னேற்றத்துக்கான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
நிதி பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை, ரூ.3.55 லட்சம் கோடி கடன் என்று தொடரும் மாநிலத்தின் நிதிநிலைமை, மிகவும் ஸ்தம்பித்துப் போயிருப்பது இந்த பட்ஜெட்டின் மூலம் தெளிவாக தெரியவருகிறது. அ.தி.மு.க. ஆட்சியின் நிதி மேலாண்மையை பொறுத்தவரையில், மிகுந்த மோசமான நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
ஜி.எஸ்.டி.யால் 9 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு வருமென்று மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா, அன்றைக்கே எடுத்து சொன்னார். இன்றைக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த நிதிநிலை அறிக்கையில், ஜி.எஸ்.டி.யால் பயன் விளைந்திருக்கிறது, லாபம் வந்திருக்கிறது என்ற செய்தியை வெளியிட்டு இருக்கிறார்.
இதில் இருந்து, மத்தியில் இருக்கின்ற பா.ஜ.க. ஆட்சிக்கு ஜால்ரா போடும் ஆட்சியாக இந்த ஆட்சி நடக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இந்த பட்ஜெட் என்பதை அழுத்தம் திருத்தமாக நான் குறிப்பிட விரும்புகிறேன்.
ஆகவே, துணை முதல்-அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும் இருக்கின்ற ஓ.பன்னீர்செல்வம் இன்றைக்கு தாக்கல் செய்திருக்கின்ற பட்ஜெட் பற்றி ஒரே ஒரு வரியில் சொல்வதென்றால், ஓட்டை பானையில் சமையல் செய்யும் முயற்சி.
இவ்வாறு அவர் கூறினார்.
பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
2017-2018-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போது வருவாய் பற்றாக்குறை 15 ஆயிரத்து 930 கோடி ரூபாயாக இருந்தது. அது இப்போது 17 ஆயிரத்து 491 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை 41 ஆயிரத்து 977 கோடி ரூபாயாக இருந்தது. அது தற்போது, 44 ஆயிரத்து 481 கோடி ரூபாயாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.3.14 லட்சம் கோடியாக இருந்த மாநில அரசின் கடன், இப்போது ரூ.3.55 லட்சம் கோடியை எட்டும் என கூறப்பட்டுள்ளது. கணிக்கப்பட்ட எண்ணிக்கையே இந்த அளவு இருக்கும் என்றால் உண்மையில் நிதியாண்டு முடியும்போது இந்த எண்ணிக்கை நிச்சயம் இதைவிட மோசமாகத்தான் இருக்கும் என்பது எதார்த்தமான உண்மை.
வழக்கமான ஒப்பனை அறிவிப்புகள் தவிர, ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் கட்டுவது மட்டுமே இந்த நிதிநிலை அறிக்கையின் ஒரே சாதனையாக இருக்கிறது. இதற்கென 50 கோடி ரூபாயும், ஜெயலலிதாவின் இல்லத்தை வாங்க 20 கோடி ரூபாயும் செலவிடத்தயாராக இருக்கும் இந்த அரசு, தமிழகம் முழுவதும் புதிதாக தீயணைப்பு நிலையங்களை அமைக்க வெறும் 20 கோடியை மட்டுமே ஒதுக்கியிருக்கிறது என்பது வேதனை அளிக்கிறது.
நிதிப் பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை, மிக மோசமான கடன் என்று அ.தி.மு.க. அரசு தமிழகத்தை கடும் நிதி நெருக்கடி பள்ளத்தில் தள்ளிவிட்டு, மாநில முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் அபாய சங்கு ஊதியிருக்கிறது என்பதே இந்த நிதிநிலை அறிக்கையின் உரை என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.