தமிழக செய்திகள்

மக்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் தி.மு.க.வினருக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் மக்களை காப்பாற்றும் நடவடிக்கையில் தி.மு.க.வினர் ஈடுபட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் மிக அதிகமாக மழை பெய்யும் என்றும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் 24.4 செ.மீட்டருக்கு மேலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இந்நிலையில், முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பணிகள் குறித்து மதுரையில் கட்சி ஆலோசனைக்கூட்டம் நடத்தியிருப்பது, பொறுப்பினை தட்டிக் கழித்து விட்டு, கட்சி வேலையைப் பார்க்கப் போய் விட்டதை உணர்த்துகிறது.

சென்னை மாநகராட்சி சார்பில் வடகிழக்கு மழை தொடர்பாக 18.9.2018-ல் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் மழை நீர் வடிகால்வாய்களை தூர்வாரும் பணி, ஆகாயத்தாமரை அகற்றுதல், வண்டல் மண் அகற்றுதல் போன்ற பணிகள் 60 கோடி ரூபாய் அளவில் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் 4-ந்தேதி வெளியிடப்படுகிறது. இதுதொடர்பான முன்னேற்பாடுகள் 15 நாட்களுக்கு முன்பு தான் தொடங்கியிருக்கிறது. அது இன்னும் முடியவில்லை என்பது இந்த ஆலோசனைக் கூட்ட பத்திரிகை குறிப்பில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. உள்ளாட்சி நிர்வாகம் இந்த அ.தி.மு.க அரசில் மிக மோசமான நிர்வாக சீர்கேட்டில் சிக்கித்தவிக்கிறது.

மழை நீர் கால்வாய்களை தூர்வாரும் பணியோ, 30-க்கும் மேற்பட்ட பெரிய கால்வாய்களை தூர்வாரும் பணியோ குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் தூங்கிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க ஆட்சியில் சென்னை மாநகராட்சியின் செயல்பாடும் தூங்கிக்கொண்டிருக்கிறது என்பதால் அந்தப் பணிகளும் இன்னும் நிறைவடையவில்லை என்பதை இந்த ஆலோசனைக் கூட்டம் தெளிவுபடுத்துகிறது.

தமிழ்நாடு முழுவதுமே இதே மோசமான நிலைமை தான் நீடிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. வழக்கம்போல் அறிவிப்புகள் வெளிவருகிறதே தவிர, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லை. கடந்த இரு தினங்களாக பெய்து வரும் மிதமான மழைக்கே, சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே, பள்ளமும், படுகுழிகளுமாக காணப்படும் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்கு ஆளாகும் நிலையே காணப்படுகிறது.

ஆனால், பருவமழை முன்னேற்பாடுகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட பிறகுதான் அரசு தயாராகிறது என்பது வெட்கக்கேடானது. கால்வாய்கள் முழுவதும் தூர்வாரும் பணிகள், மழைநீர் வடிகால்வாய்களில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணிகள், திறந்த வெளியில் இன்னும் ஆங்காங்கே கொட்டிக் கிடக்கும் குப்பைகள் போன்றவற்றை அகற்றும் பணி இதுவரை முடிவடையவில்லை.

ஆகவே தூர்வாரும் பணிகள், குப்பை அள்ளும் பணிகளை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் சென்னை மாநகராட்சி எடுக்க வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதே வேகத்தில் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

மழையால் பாதிப்புகள் ஏற்படுமேயானால், ஆங்காங்கே தி.மு.க. நிர்வாகிகளும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும், தி.மு.க. தொண்டர்களும், சமூக ஆர்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு நிவாரண பணிகளிலும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி, மக்களை காப்பாற்றும் அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்