சென்னை,
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இதில், அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் கலந்துகொண்டு பேசி வருகின்றனர்.
இந்த நிலையில், திருவெறும்பூர் தவெக எம்.எல்.ஏ. விஜி பேசுகையில், "எனது தொகுதியில் கொடுக்கப்பட்ட பட்டாவுக்கான இடங்கள் கிடையாது. தேர்தலுக்காக போலி பட்டா கொடுத்துள்ளார்கள். வேண்டுமென்றால் ஆய்வு செய்து பாருங்கள்" எனத் தெரிவித்தார்.
அவரின் பேச்சுக்கு திமுக தரப்பில் எதிர்ப்பு எழுந்த நிலையில், எதிர்க்கட்சிகளை நோக்கி அனைவரும் உட்காருங்கள், உண்மையைதான் பேசுகிறேன் என்றார்.
இதனால் டென்ஷன் ஆன பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், முதலில் நீங்கள் உட்காருங்கள் என்று கடிந்து கொண்டார்.
இதனிடையே வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், கடந்த ஆட்சியில் ஒரு இடத்தை தேர்வு செய்து பட்டா வழங்கியிருக்க கூடும். அந்த பட்டாவை லே-அவுட் செய்யப்பட்டு வழங்கப்படும். பல இடங்களில் குறைபாடுகள் இருப்பது கவனத்துக்கு வந்துள்ளது என்றார்.
நீட் தேர்வு விலக்கு தீர்மானம் தொடர்பாக அமைச்சர் விஸ்வநாதன் பேசிக் கொண்டிருந்த போது திமுக எம்.எல்.ஏக்கள் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் எதிர்வினையாக தவெக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் ஆவேசமாக முழக்கமிட்டனர் "ஒழுங்கீனமாக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் நின்றால் நடவடிக்கை எடுப்பேன்" என திமுக மற்றும் தவெக எம்.எல்.ஏக்களை சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் எச்சரித்தார்.
முன்னதாக, திமுகவை விமர்சித்து சூலூர் எம்.எல்.ஏ. சுகுமார் பேசும்போது எதிர்ப்புகள் எழுந்த நிலையில், சர்ச்சைக்குரிய கருத்துகளை பேச வேண்டாம் என்று பேரவைத் தலைவர் அறிவுரை வழங்கியது குறிப்பிடத்தக்கது.