சென்னை,
சட்டசபை தேர்தல் தோல்வியால், அ.தி.மு.க.வில் பெரும் பூகம்பமே வெடித்துள்ளது. அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் தனி அணி உருவாகி உள்ளது.
தேர்தல் தோல்விக்கு பின்னர் நடந்த ஆலோசனை கூட்டத்தில் உட்கட்சி மோதல் வெடித்தது. இதையடுத்து நடந்த சம்பவங்களால் அக்கட்சி இரண்டாக உடைந்தது.
கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கு எதிராக, த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்க சி.வி.சண்முகம், வேலுமணி தலைமையிலான அணி முன்வந்தது. இதை அவர்கள் பகிரங்கமாக தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக முதல்-அமைச்சர் விஜய், சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி.சண்முகம் இல்லத்துக்கு சென்று அவரையும், அவரது ஆதரவாளர்களையும் சந்தித்தார்.
இந்தநிலையில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்காக கடந்த 12-ம் தேதி சட்டசபை கூடியது.
அ.தி.மு.க.வின் 47 எம்.எல்.ஏ.க்களும் அவைக்கு வந்திருந்தனர்.
பின்னர் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள 22 பேரும் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். ஆனால் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகி யோருக்கு ஆதரவாக உள்ள 25 பேரும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதன் தொடர்ச்சியாக சி.வி.சண்முகம் தரப்பினர் எடப்பாடி பழனிசாமி மீது சரமாரி குற்றச் சாட்டுகளை தெரிவித்தனர்.
இதனிடையே கட்சியின் பொதுச்செயலாளர் நியமித்த கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக 25 எம்.எல்.ஏ.க்கள் செயல்பட்டு உள்ளனர். எனவே அவர்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சட்டசபை செயலாளரிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை ஒ.எஸ்.மணியன், தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இன்பத்துரை ஆகியோர் அளித்தனர்.
இன்று காலை, சி.வி.சண்முகம் ஆதரவாளரான ஆற்காடு எம்.எல்.ஏ. சுகுமார் சென்னை பசுமைவழி சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அ.தி.மு.க. எம்எல்ஏக்கள் சுகுமார், ஜெயக்குமார், ஹரி பாஸ்கர் ஆகிய மூன்று பேரும் எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே எடப்பாடி பழனிசாமி அணியில் பலம் கூடி உள்ளது.
இந்தநிலையில், சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் கே.சி.டி.பிரபாகரை கே.பி.அன்பழகன், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்து உடனட்டி தகவல் ஏதும் வெளியாக வில்லை. அதிமுக கொறடாவாக எஸ்.பி.வேலுமணியை அங்கீகரிக்க கோரி ஏற்கெனவே மனு அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இருவேறு குழுக்களாக பிரிந்து இருக்கும் அ.தி.மு.க.வினர் மனு கொடுத்து இருக்கிறார்கள். அது என்னுடைய ஆய்வில் இருக்கிறது. உரிய நேரத்தில் உரிய முடிவெடுத்து சட்டசபையில் அறிவிக்கும்போது, நான் எப்படி நியாயமாக நடந்து கொண்டேன் என்பதை நாடு தெரிந்து கொள்ளும்' என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறினார்.