தமிழக செய்திகள்

படப்பை அருகே இளம்பெண்ணிடம் செல்போன் பறிப்பு

படப்பை அருகே இளம்பெண்ணிடம் செல்போன் பறிப்பு புகாரில் வடமாநில தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 23). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை சி.ஐ.டி. அவென்யு பகுதியில் தங்கியிருந்து ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் ஐஸ்வர்யாவை கீழே தள்ளிவிட்டு ஐஸ்வர்யாவிடம் இருந்த செல்போனை பறித்து சென்றார். இதுகுறித்து ஐஸ்வர்யா மணிமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக படப்பை பகுதியில் தங்கியிருந்த மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி பப்லு (வயது 28) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் ஐஸ்வர்யாவை கீழே தள்ளி செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து பப்லுவை போலீசார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT