நீலகிரி,
நீலகிரி மாவட்டத்தில் வீரமரணம் அடைந்த மோக்கா என்ற மோப்பநாயின் உடலுக்கு 24 குண்டுகள் முழங்க அரசு இறுதி மரியாதை செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் காவல் துறையில் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் “மோக்கா” என்ற மோப்பநாய் சிறப்பாகச் செயல்பட்டு வந்தது. மேலும் மோக்கா நாய் கொலை, கொள்ளை உள்ளிட்ட 26 முக்கிய குற்ற வழக்குகளைக் கண்டுபிடிக்க உதவி சாதனை படைத்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மோக்கா ஊட்டியில் உள்ள காவல் துறை மோப்பநாய் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தது. ஆனால் சிகிக்கை பலனின்றி உயிரிழந்தது.
வீரமரணம் அடைந்த மோக்காவின் உடலுக்கு உயர் காவல் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் காவல் துறை சார்பில் தொடர்ந்து 24 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ஊட்டி ஆயுதப்படை மைதானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
காவல் துறையில் பெரும் பங்காற்றிய இந்த மோப்பநாயின் மறைவு நீலகிரி மாவட்ட காவல் துறையினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.