சென்னை,
இன்றைய காலக்கட்டத்தில் இணைய குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதைக் கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். எனினும் மர்மநபர்கள் பல்வேறு வகைகளில் பொதுமக்களை ஏமாற்றி பணத்தை பறித்துச் செல்கின்றனர்.
தற்போது ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலிகள் அதிகரித்து விட்டன. அந்த செயலிகள் பயனுள்ளதாக இருக்கும்போதிலும், அதை சமூக விரோத செயல்களும் சிலர் பயன்படுத்துகின்றனர். அவற்றில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-
மர்மநபர்கள் சமூக வலைதளங்களில் போலி முகவரியில் கணக்குகளை உருவாக்கி, சமூக வலைதளங்களில் செயல்படக்கூடிய பெண்களின் வலைதள பக்கத்திற்கு சென்று அவர்களின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்கின்றனர்.
பின்னர் அந்த புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சம்பந்தப்பட்ட நபர்களின் வலைதள பக்கத்திற்கு குறுந்தகவல் மூலம் அனுப்பி, பாலியல் தொல்லை கொடுப்பது, அவர்களை மிரட்டி பணம் பறிப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மர்மநபர்கள் யாராவது தங்களை மிரட்டினால் அவர்கள் தொடர்பான விவரங்களை சைபர் கிரைம் போலீசில் உடனடியாக தெரிவிக்கலாம். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறியுள்ளனர்.