தமிழக செய்திகள்

மயிலாப்பூர் திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

கட்சி நிர்வாகிகளுக்கு பணம் விநியோகம் செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை (வியாழக்கி ழமை) நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் பட்டுவாடா செய்வதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் தா. வேலுவின் தனி உதவியாளராக இருப்பவர் சத்தியமூர்த்தி. இவரது வீட்டில் வாக்களர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், தேர்தல் பறக்கும் படையினர் சத்தியமூர்த்தியின் வீட்டில் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது வீட்டில் ஒரு பேக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 ரூபாய் நோட்டுக் கட்டுகளை பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ. 2 கோடி ரொக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. பணத்தை எண்ணுவதற்காகப் பிரத்யேக இயந்திரங்களை அதிகாரிகள் கொண்டு வந்தனர். பணம் மட்டுமின்றி, அந்த வீட்டில் இருந்து வாக்காளர் பட்டியல்கள், சில முக்கிய டைரிகள் மற்றும் தேர்தல் தொடர்பான ரகசிய ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கட்சி நிர்வாகிகளுக்கு பணம் விநியோகம் செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெலியாகியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் மயிலாப்பூர் தொகுதியில் மட்டுமின்றி தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.