தமிழக செய்திகள்

குற்றாலம் மெயின் அருவியில் சுற்றித்திரிந்த உடும்பு - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்

குற்றால அருவியில் அடித்து வரப்பட்ட உடும்பு மெயின் அருவியில் சுற்றித்திரிந்தது.

தென்காசி,

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. இதனால் புகழ்பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் முற்றிலும் குறைவாகவே விழுந்தது. புலியருவியும் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் லேசான சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக நேற்று குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. அருவிகளில் தண்ணீர் சீராக கொட்டி வருகிறது. புலியருவிக்கும் தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில், குற்றால அருவியில் அடித்து வரப்பட்ட உடும்பு மெயின் அருவியில் சுற்றித்திரிந்ததால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள், உடும்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். இதனால் குற்றலாம் மெயின் அருவியில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்ட‌து.