சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வளசரவாக்கம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மண்டல கண்காணிப்பு அலுவலர் முனைவர் ஜெ.விஜயா ராணி, இன்று (30.08.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வளசரவாக்கம் மண்டலத்தில், வார்டு 148ல் உள்ள விருகம்பாக்கம் கால்வாயில் தடுப்புச் சுவர் கட்டும் பணி, ஆற்காடு சாலையில் மழைநீர் வடிகால் பணி,போரூர் சந்திப்பில் மழைநீர் வடிகால் பணி, மவுண்ட் பூந்தமல்லி சாலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் பணிகள் நடைபெறும் இடத்தில் மீண்டும் மழைநீர் வடிகால் கட்டுதல், நந்தம்பாக்கம் கால்வாயில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளை மண்டல கண்காணிப்பு அலுவலர் தோட்டக் கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை இயக்குநர் முனைவர் ஜெ.விஜயா ராணி, பார்வையிட்டு, வடகிழக்குப் பருவ மழைக்கு முன்னதாக இப்பணிகளை முடித்திடவும், மோட்டார் பம்புகள், இயந்திரங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின் போது, மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.