தமிழக செய்திகள்

சோழிங்கநல்லூர் மண்டலத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்: இணை ஆணையாளர் ஆய்வு

மாநகராட்சி இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன் இன்று சோழிங்கநல்லூர் மண்டலத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை,

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, சோழிங்கநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, சோழிங்கநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஒருங்கிணைந்த சமூகச் சந்தை மற்றும் நலவாழ்வு மையம், கண்ணகி நகர் விளையாட்டுத் திடல் ஆகியவற்றை இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன் இன்று (13.08.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இணை ஆணையாளர் பணிகள், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-196க்குட்பட்ட ஒக்கியம் மடுவில் நீர் வெளியேறும் பகுதியினைப் பார்வையிட்டு, பருவமழைக்கு முன்னதாக 5 மதகுகளிலும் நீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இணை ஆணையாளர் ஆய்வு

இதனைத் தொடர்ந்து, வார்டு-199க்குட்பட்ட சோழிங்கநல்லூர் போக்குவரத்து சந்திப்பில் நெடுஞ்சாலைத்துறையின் மழைநீர் வடிகாலில் நீர் வெளியேறும் பகுதியினைப் பார்வையிட்டு, மழைநீர் தங்குதடையின்றி வெளியேற நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், வார்டு-195க்குட்பட்ட எழில் நகரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த சமூகச் சந்தை மற்றும் நலவாழ்வு மையக் கட்டடப் (Integrated Community Market & Welfare Centre) பணி, வார்டு-196க்குட்பட்ட கண்ணகி நகரில் உள்ள விளையாட்டுத் திடல் மற்றும் கபடி உள்விளையாட்டு அரங்கில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த ஆய்வுகளின் போது, தெற்கு வட்டார துணை ஆணையாளர் அதாப் ரசூல் மண்டல அலுவலர் ஜி.லோகேஸ்வரன், மாநகராட்சி மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.