சென்னை,
கேரள மாநிலம் மூணாறில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில், தமிழகத்தை சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் புதையுண்டனர். நேற்று இரவு வரை 43 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், நேற்று காலை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது, மூணாறு சம்பவத்தில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தேவையான உதவிகளை வழங்குவதாக எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.
இது தொடர்பாக, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக மூணாறில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதம் குறித்து காலையில் கேரள முதல்-மந்திரியிடம் பேசினேன். மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தேவையான உதவிகளை வழங்குவதாக நான் அவரிடம், உறுதியளித்தேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.