தமிழக செய்திகள்

முன்விரோதத்தில் தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டு; இருதரப்பு மோதல்: 4 பேர் கைது

தென்காசியில் முன்விரோதம் காரணமாக, கல்லூரி மாணவர், அவரது தாயார் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தையடுத்து நடந்த சாலை மறியல், இருதரப்பு கல்வீச்சால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே காசிதர்மம் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் (வயது 19) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி(60) என்பவருக்கும் இடையே ஆடு மேய்ப்பது தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்து வந்தது. இதில் ஏற்கனவே விக்னேஷ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்திருந்தார்.

நேற்று முன்தினம் காலை, தனது மோட்டார் சைக்கிளை மீட்பதற்கான ஆவணங்களை ஜெராக்ஸ் எடுக்க தனது தாயார் மாடத்தியுடன் விக்னேஷ் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த முத்துப்பாண்டி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் விக்னேஷை சரமாரியாக வெட்டியுள்ளார். மகனை காப்பாற்ற முயன்ற தாய் மாடத்திக்கும் கைவிரலில் வெட்டு விழுந்தது. படுகாயமடைந்த 2 பேரும் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலை கண்டித்து விக்னேஷின் உறவினர்கள் மற்றும் சமூகத்தினர் செங்கோட்டை- கடையநல்லூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மற்றொரு தரப்பினருக்கும் இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். இந்த கல்வீச்சில் 4-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தென்காசி மாவட்ட எஸ்.பி. மயில்வாகனன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். கல்வீச்சில் ஈடுபட்ட இரண்டு தரப்பையும் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தப்பியோடிய முத்துப்பாண்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

தற்போது அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால், தென்காசி டி.எஸ்.பி. அதியமான் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடையநல்லூர் அரசு கலைக் கல்லூரி வாசலிலும், காசிதர்மம் கிராமத்திலும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.