தமிழக செய்திகள்

3 வயது குழந்தைக்கு சூடு வைத்து சித்ரவதை: தாய், வளர்ப்பு தந்தை கைது

போலீசார் சிறுவனை குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பில் ஒப்படைத்தனர்.

திருப்பூர்,

புதுச்சேரியை சேர்ந்தவர் சுஜாதா (வயது 23). இவருக்கு திருமணமாகி 3 வயதில் மகன் இருக்கிறான். கருத்து வேறுபாடு காரணமாக சுஜாதாவின் கணவர் பிரிந்து சென்றார். இதனால் சுஜாதா தனது மகனுடன் வசித்து வந்தார். அப்போது தினேஷ்குமார் என்பவரை 2-வதாக திருமணம் செய்துகொண்டார். அதன்பின்னர் சிறுவனுடன் சுஜாதா, தினேஷ்குமார் திருப்பூர்-மங்கலம் சாலை கோழிப்பண்ணை பகுதியில் குடியிருந்தனர்.

காலில் சூடு

இவர்கள் வேலைக்கு செல்வதால் மகனை அருகில் உள்ள அங்கன்வாடியில் சுஜாதா சேர்த்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அங்கன்வாடியில் அந்த சிறுவன் மிகுந்த சோர்வடைந்து காணப்பட்டதோடு நடக்க முடியாமல் தவித்துள்ளான். இதனை கவனித்த அங்கன்வாடி ஊழியர் சிறுவனை சோதனை செய்தபோது. காலில் சூடு வைக்கப்பட்டிருந்தது. மேலும் உடம்பில் பல பகுதிகளில் காயம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தாய், வளர்ப்பு தந்தை கைது

உடனடியாக இது குறித்து குழந்தைகள் நலப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் குழந்தையை திருப்பூர் மத்திய போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் சிறுவனின், தாய், வளர்ப்பு தந்தை இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுவனுக்கு சூடு வைத்து சித்ரவதை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இருவரையும் மத்திய போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுவனை குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பில் ஒப்படைத்தனர்.