கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

மகளிடம் அத்துமீற முயன்றதை தட்டி கேட்ட தாய்: கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த கணவன்

போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான விஜயபாலனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

திருப்பூர்,

மகளிடம் அத்துமீறியதைத் தட்டிக்கேட்ட தாயை, கணவன் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் கணவரின் மகள்

திருப்பூர் அவிநாசி ரோடு, பாண்டியன் நகர் வீரமாருதி தெருவைச் சேர்ந்தவர் விசாலாட்சி (40 வயது). இவர் மகளிர் சுயஉதவிக் குழுவில் வேலை செய்து வந்தார். இவரது முதல் கணவர் இறந்துவிட்டார். முதல் கணவர் மூலம் 19 வயது மகள் உள்ளார். விசாலாட்சி சமையல் வேலை செய்து தனது மகளை படிக்க வைத்தார்.

இரண்டாவது திருமணம்

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் சமையல் வேலைக்குச் சென்றபோது, விழுப்புரம் மாவட்டம் அதனூரைச் சேர்ந்த விஜயபாலன் (42 வயது) என்பவருடன் விசாலாட்சிக்கு பழக்கம் ஏற்பட்டு அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சரவணகுமார் (15 வயது), ஹரிஹர சிவா (11 வயது) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

அத்துமீறல்

இந்த நிலையில், இன்று அதிகாலை 1 மணியளவில், தூங்கிக் கொண்டிருந்தபோது, முதல் கணவரின் மகளிடம் விஜயபாலன் அத்துமீறி தவறாக நடக்க முயன்றுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர் அலறித் துடித்து தாயை கூப்பிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயபாலன் அவரை மிரட்டியுள்ளார். சத்தம் கேட்டு விழித்த விசாலாட்சி, தனது மகளிடம் அத்துமீற முயன்ற இரண்டாவது கணவர் விஜயபாலனை கடுமையாகத் தட்டிக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கொலை

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த விஜயபாலன் விசாலாட்சியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்ய முயன்றார். இதில் ரத்த வெள்ளத்தில் விசாலாட்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலையை நேரில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த மகளிடம், சத்தம் போட்டால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

தலைமறைவு

இதையடுத்து, மகள் மிகவும் சாமர்த்தியமாக பாத்ரூம் செல்வதாகக் கூறி வெளியே வந்து, வீட்டின் கதவை பூட்டிவிட்டு தப்பியோடினார். பின்னர் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரிடம் செல்போனை வாங்கி போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். இதனிடையே வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்த விஜயபாலன், தனது 2 மகன்களையும் அழைத்துக் கொண்டு, பைக்கில் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விசாலாட்சியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான விஜயபாலனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT