தமிழக செய்திகள்

11 வயது மகளை கொலை செய்து நாடகமாடிய தாய் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

பெற்ற மகளை தாய் கொலை செய்து நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள கெங்கவரம் ஊத்துக்கோட்டையை சேர்ந்தவர் முருகவேல். இவரது மனைவி சத்யா. இவர்களது மகள் வர்ஷினி (வயது 11). இவர் கண்டாச்சிபுரம் பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிகொண்டிருந்த வர்ஷினி திடீரென் காணாமல் போயுள்ளார். உடனடியாக உறவினர்களுடன் அவரை தேடினர். அப்போது வர்ஷினி வீட்டில் அருகே உள்ள குடிசையில் வளையல் உடைக்கப்பட்டநிலையில் உயிரிழந்து கிடந்தார்.

இத்தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று வர்ஷினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தநிலையில் வர்ஷினியின் தந்தை முருகவேல் போலீசில் புகார் அளித்தார்.

அதில் பெற்ற மகளை தாயே கொலை செய்து இருக்கலாம் என தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து வர்ஷினியின் தாய் சத்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்பொது சத்யா கூறிய விசயன் போலீஸாரை அதிர்ச்சியடைய செய்தது. அவர் கூறுகையில்,

’எனக்கும் எனது கணவருக்கும் கடந்த 10 ஆண்டுகளாக குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த நான் மகளை கொன்று விட்டு நானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருந்து வந்தேன். அதன்படி எனது மகளை கொலை செய்வதற்காக வாயில் துணியை வைத்து அழுத்தி கழுத்தை நெறித்து கொலை செய்தேன். அதன் பின்னர் நான் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என சென்ற போது மகள் துடிதுடித்து இறந்தது நினைவில் வந்தது. இதனால் நான் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை மாற்றிக் கொண்டேன். ஆனால் போலீசாரிடம் சிக்காமல் இருக்க எனது மகள் காதில் அணிந்திருந்த கம்மல்களை கழற்றி அருகே உள்ள பள்ளி வளாகத்தில் குப்பையில் தூக்கி எறிந்து விட்டேன். மேலும் வீட்டில் மகளின் வளையல்களை உடைத்து போலீசாருக்கு சந்தேகம் வராத வகையில் ஏற்பாடு செய்து விட்டு பக்கத்தில் உள்ள இன்னொரு வீட்டுக்கு சென்று விட்டேன். பின்னர் சிறிது நேரம் கழிந்து மகளை தேடுவது போல் தேடி மகளை நகைத்காத கொள்ளையர்கள் கொலை செய்து விட்டதாக நாடகம் ஆடினேன்’ இவ்வாறு போலீசில் கூறி உள்ளார்.

இதனை தொடர்ந்து சத்யாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் வேடம்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பெற்ற மகளை தாய் கொலை செய்து நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.