தமிழக செய்திகள்

உலகின் ஆதியும், அந்தமும் அன்னையரே... - அன்புமணி வாழ்த்து

சர்வதேச அன்னையர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

உலகை எந்த அளவுகோலைக் கொண்டும் துல்லியமாக அளக்க முடியாது. ஆனால், அம்மா என்ற மூன்றெழுத்திற்குள் ஒட்டுமொத்த உலகமும் அடக்கம். இந்த உலகின் ஆதியும், அந்தமும் அன்னை தான். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் உலகைக் கூட அளந்து விடலாம். ஆனால், அன்னையின் அன்பு, தியாகம், கருணை, அர்ப்பணிப்பு, சகிப்புத்தன்மை, அயராத உழைப்பு, ஊக்கமளிப்பு ஆகியவற்றை இந்த உலகின் எந்த தொழில்நுட்பத்தாலும் அளவிட முடியாது. ஏனென்றால், அவற்றுக்கு எல்லை கிடையாது.

இத்தகைய சிறப்புகளைக் கொண்ட அன்னையர்களின் தினம் இன்று. மனிதர்கள் தங்களின் வாழ்வில் வாங்கிய அனைத்துக் கடன்களையும் அடைத்து விட முடியும். ஆனால், அன்னைக்கான நன்றிக்கடனை நம்மால் அடைக்கவே முடியாது. அதை அடைப்பதற்கான முயற்சி நமது வாழ்க்கை. ஆனால், எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இந்த முயற்சியில் நம்மால் வெற்றி பெற முடியாது.

ஆகவே, நம்மால் இயன்ற வகையில் அவர்களின் தியாகத்தைப் போற்றுவோம்; ஒவ்வொரு வினாடியும் அன்னையை வணங்கிக் கொண்டு, நன்றிக் கடன் செலுத்திக் கொண்டே இருப்போம். அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.