சென்னை,
போலி பாஸ்போர்ட் வழக்கில் மும்பை பிரபல தாதா சோட்டா ராஜனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
பிரபல தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான மும்பையைச் சேர்ந்த சோட்டா ராஜன் மீது 50-க்கும் மேற்பட்ட கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. போலீஸ் பிடியில் 27 ஆண்டுகளாக சிக்காமல் இருந்த சோட்டா ராஜன், கடந்த 2015-ம் ஆண்டு இந்தோனேஷியாவின் பாலி தீவில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், மத்திய மும்பை காம்தேவி பகுதியில் 'கோல்டன் கிரவுன்' ஓட்டல் உரிமையாளர் ஜெயா ஷெட்டியை கொலை செய்த வழக்கு, பத்திரிகையாளர் ஜே.டே கொலை வழக்கு ஆகியவற்றில் சோட்டா ராஜனுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2002-ம் ஆண்டு, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், ஆள்மாறாட்டம் செய்து போலியான ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றதாக சோட்டா ராஜன் மீது சென்னை சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் கோர்ட்டில் உள்ள பெருநகர கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதி சிவசக்தி, சோட்டா ராஜனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.55 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.