தமிழக செய்திகள்

வியாசர்பாடி சித்தர் பீடத்தில் வாலிபர் கொலை: 3 பேர் கைது

சென்னை வியாசர்பாடி சித்தர் பீட வளாகத்தில் நடந்த வாலிபர் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேரை தனிப்படை போலீசார் ஆந்திரா சென்று கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

சென்னை,

சென்னை வியாசர்பாடியில் உள்ள சித்தர் பீடத்தில் நடந்த வாலிபர் கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வாலிபர் வெட்டிக்கொலை

சென்னை வியாசர்பாடி உதயசூரியன் நகரைச் சேர்ந்தவர் நரேஷ்(எ) நரேஷ்குமார் (வயது 21), நேற்று முன்தினம் காலை வியாசர்பாடி சாமியார் தோட்டம் பகுதியில் உள்ள சித்தர் பீட வளாகத்தில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக, வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து கொலையாளிகளைத் தேடி வந்தனர்.

3 பேர் கைது

இந்த நிலையில், ஆந்திராவில் பதுங்கி இருந்த உதயசூரியன் நகரைச் சேர்ந்த பிரேம்குமார்(19), விக்கி(எ) விக்னேஸ்வரன்(20), ஜீவா(22) ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட நரேஷ்குமார் மற்றும் அவரது நண்பரான முல்லை நகரைச் சேர்ந்த சஞ்சய் ஆகியோருக்கும், கைதான விக்னேஸ்வரனுக்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இதனால், நரேஷ்குமாரும், சஞ்சையும் சேர்ந்து விக்னேஸ்வரனை கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. எனவே, அவர்களை விட்டு வைத்தால் தொடர்ந்து தொல்லை ஏற்படும் என்று கருதிய விக்னேஸ்வரன், தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டார்.

மேலும் சிலருக்கு வலைவீச்சு

அதன்படி, சித்தர் பீட வளாகத்தில் பிரேம்குமார், விக்னேஸ்வரன், ஜீவா, சிலம்பரசன் மற்றும் முத்து ஆகியோர் அமர்ந்து கஞ்சா புகைத்துக் கொண்டிருந்தனர். பின்னர் சிலம்பரசன் மூலம் நரேஷ்குமாருக்கு போன் செய்து சம்பவ இடத்துக்கு வரவழைத்தனர். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் நரேஷ்குமாரை சரமாரியாக வெட்டிக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றது, கைதான 3 பேரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.