தமிழக செய்திகள்

வி.சி.க. நிர்வாகி கொலை: குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு - தாம்பரம் போலீசார் தகவல்

வி.சி.க. நிர்வாகியை கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு, ஆட்டோ ரிக்ஷா மற்றும் இருசக்கர வாகனத்தில் மர்ம நபர்கள் தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.

சென்னை,

வி.சி.க. நிர்வாகி கொல்லப்பட்ட சம்பவத்தில், தடயவியல் குழுவினர் மூலம் சம்பவ இடத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெட்டிக்கொலை

இதுதொடர்பாக தாம்பரம் மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருநீர்மலை பிரதான சாலையில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை

28.08.2026 அன்று மதியம் சுமார் 14.15 மணியளவில், சங்கர் நகர் காவல் எல்லைக்குட்பட்ட திருநீர்மலை பிரதான சாலையில் உள்ள மன்ற கட்டிடத்திற்குள், அன்பழகன் (எ) மைனகுட்டி, வ/40, என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

கொலை வழக்குகள்

நாகல்கேணியை சேர்ந்த இவர், தற்போது குடும்பத்தினருடன் கே.கே.நகரில் வசித்து வந்ததுடன், உள்ளூர் குவாரியில் கட்டிட வேலைக்கான சரளை மணலை (Gravel) கையாளும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது 2009 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட இரண்டு கொலை வழக்குகள் உட்பட மொத்தம் 14 குற்ற வழக்குகள் உள்ளன.

அடையாளம் தெரியாத நபர்கள்

முதற்கட்ட விசாரணையில், அன்பழகன் காலை சுமார் 9 மணியளவில் பணிக்காக திருநீர்மலை பிரதான சாலைக்கு வந்து, மதியம் 13.45 மணி வரை தனது நண்பர்களான பிரபு மற்றும் பாலாஜியுடன் மன்றக் கட்டிடத்தில் இருந்துள்ளார். அவர்கள் மதிய உணவிற்காக வெளியே சென்ற நிலையில், பிரபு சுமார் 14.30 மணியளவில் மீண்டும் அங்கு வந்தபோது, கத்திகளுடன் வந்த 4 முதல் 5 பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் கட்டிடத்திற்குள் செல்வதைக் கண்டு சத்தமிட்டுள்ளார்.

அக்கும்பல் பிரபுவை மிரட்டி தடுத்துவிட்டு, கட்டிடத்திற்குள் இருந்த அன்பழகனை கொடூரமாகத் தாக்கி கொலை செய்துவிட்டு, ஆட்டோ ரிக்ஷா மற்றும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.

5 தனிப்படைகள்

இச்சம்பவம் குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தடயவியல் குழுவினர் மூலம் சம்பவ இடத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளையும் அவர்கள் பயன்படுத்திய வாகனங்களையும் அடையாளம் காணவும், கொலையாளிகளை விரைந்து கைது செய்யவும் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.